இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு

23.11.2021 08:57:54

''உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில் ஐ.நா. அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது'' என ஐ.நா. அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில் மக்களை காக்கும் பணியில் ஐ.நா. அமைதிப் படை ஈடுபட்டு வருகிறது.இது குறித்து ஐ.நா. அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் கூறியதாவது: ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக அளவில் ராணுவத்தினரை அனுப்பும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு நன்றி எதிர்பார்ப்பு என்ற இரு செய்திகளை சொல்ல விரும்புகிறேன்.

அரசியலிலும் அமைதிப் படையினரின் பங்களிப்பிலும் ஐ.நா.வை வலுவாக ஆதரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுமட்டுமின்றி அமைதிப் படையில் பங்கேற்று இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகத்தையும் மறக்க மாட்டேன்.அதற்காக நன்றி.அடுத்து ஐ.நா.விற்கு இந்தியாவிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.

அவற்றை நிறைவேற்றி உதவக் கூடிய அளப்பரிய வலிமை இந்தியாவிடம் உள்ளது. போலீஸ் மற்றும் ராணுவத்தில் அதிக அளவில் பெண்களை இணைக்க இந்தியா உதவ வேண்டும். மேலும் மூத்த அதிகாரிகள் மூத்த பெண் அதிகாரிகள் ஆகியோரையும் அதிக அளவில் அமைதிப் படையில் இணைக்க முன் வர வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.