மனைவியை நரபலி கொடுக்க முயன்ற கணவர்.!

07.10.2021 06:59:15

மகாராஷ்டிரா- ஜல்னா மாவட்டத்தில் உள்ள டோன்காவ் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்.இவரின் உறவினர் ஜீவன் மற்றும் இவரது மனைவி மீனா. குடிப்பழக்கமுள்ள சந்தோஷ், எப்போதும் சுடுகாட்டில் சுற்றிக்கொண்டிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,அவர் தனது மனைவியிடம் விரைவில் எனக்கு புதையல் கிடைக்கவிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் திகதி சந்தோஷ், பெண் மந்திரவாதி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்தார்.

அந்த பெண் மந்திரவாதி சந்தோஷ் வீட்டில் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின்போது சந்தோஷிடம் நரபலி கொடுக்க வேண்டும் என பெண் மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

யாரை நரபலி கொடுப்பது என நினைத்த சந்தோஷ், தனது மனைவியை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது மனைவியிடம், “ புதையலைக் கண்டுபிடிக்க உன்னை நரபலி கொடுக்கப்போகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், சந்தோஷ் தனது மனைவிக்கு சில பூஜைகளையும் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

உடனே சந்தோஷ் தனது மனைவியை அடித்து உதைத்திருக்கிறார். உடனடியாக மீனா, அக்கிராமத்திலுள்ள சிலரிடம் தனது கணவனின் செயல் சம்பந்தமாக தெரிவித்துள்ளார்.

கிராம மக்கள், தன்னுடைய தந்தை ஆகியோரின் துணையோடு தன் கணவன், பெண் மந்திரவாதிக்கு எதிராக போலீஸில் புகார் செய்துள்ளார்.

போலீஸார் நரபலி தடுப்புச் சட்டம், பில்லி சூனிய தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ், பெண் மந்திரவாதி, சந்தோஷின் உறவினர் ஜீவன் ஆகியோரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பெண் மந்திரவாதியிடம் இதற்கு முன்பு யாரையாவது அவர் நரபலி கொடுத்து இருக்கிறாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.