சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

29.01.2023 13:09:52

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து, போராட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் தாயகத்தை பொறுத்த வரையில் சிறிலங்கா சுதந்திர தினம் கரிநாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு நகரில் கலந்துரையாடல்

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கபடவுள்ள ஜனநாயக வழி போராட்டம் தொடர்பான கலந்துரையாடல் சிவில் அமைப்புக்களுடன் மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார் ,ஊடாகவியலாளர்கள் உட்பட சுமார் 30 சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவபடுத்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இதன்படி எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழர் தாயகத்தில் பாரிய எழுச்சி போராட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வழமைக்கு மாறாக இந்த முறை தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.