5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கோவிட் அதிகரிப்பு

10.01.2022 08:00:44

தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், முகக்கவசம் அணியவும் நோய் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது.

இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது: டிசம்பரிலிருந்து நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் விகிதம் 1 லட்சத்திற்கு 2.5 ஆக இருந்தது, தற்போது ஒரு லட்சத்துக்கு நான்கு குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். 12 முதல் 18 வயதினரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோரும், 5 முதல் 11 வயதினரில் 16 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
 

ஜார்ஜியா, கனெக்டிகட், டென்னசி, கலிபோர்னியா மற்றும் ஓரிகான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் உள்ளனர். டெல்டா வகையுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரானில் நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் வெவ்வேறு பிரச்னைகளுக்கு வந்தவர்கள். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கோவிட் பாசிடிவ் முடிவுகள் கிடைத்துள்ளது. அவர்கள் கோவிட்டிற்காக மருத்துவமனையில் உள்ளார்கள் என கருதக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.