
அச்சத்தில் 90 சதவிகித ஜேர்மானிய மக்கள்!
வெளிநாட்டு சக்திகளால் சமூக ஊடகங்கள் வழியாக நாடாளுமன்றத் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்ற அச்சத்தை 90 சதவிகித ஜேர்மானிய மக்கள் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஜேர்மானிய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர். Bitkom என்ற அமைப்பு கடந்த மாதம் 1000 வாக்காளர்களிடம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் 45 சதவிகிதம் பேர்கள் ரஷ்யாவால் தேர்தல் சீர்குலைய வாய்ப்புள்ளதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவும் முயற்சிகள் செய்யலாம் என 42 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். |
சீனா 26 சதவிகிதம் என்றும் கிழக்கு ஐரோப்பா 8 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (69%) பேர்களுக்கு, பிப்ரவரி 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல்கள் பற்றிய தகவல்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உரையாடல்கள் தொடர்ந்து மிகவும் முக்கியமானவை என 82 சதவிகிதம் பேர்கள் தெரிவித்துள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்ட 76 சதவிகிதம் மக்கள் செய்தி ஊடகங்களே காரணம் என குறிப்பிட்டுள்ளனர். பதிலளித்தவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் புதிய அரசாங்கம் டிஜிட்டல் கொள்கையை அதன் முன்னுரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மட்டுமின்றி, 71 சதவிகிதம் பேர்கள் புதிய, சுதந்திரமான டிஜிட்டல் அமைச்சகத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டவரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க் ஜேர்மன் தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |