ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்.

10.07.2026 14:11:24

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். செழியன் இயக்கிய Tolet என்ற படத்திற்காக தேசிய விருதை வென்றனர். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செழியன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் காலமானர்.

  

தமிழ் சினிமாவின் இரு பெரும் இயக்குநர்கள் காலமானதால், திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. இந்த சோகமே இன்னும் மறையாத சூழலில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் திடீரென காலமாகி இருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த செழியன், பொறியியல் முடித்துவிட்டு திரையுலகம் பக்கம் நகர்ந்தார். ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட செழியன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

அப்படி பணியாற்றிய போதுதான் சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி திரைப்படத்தில் சில பாடல்களை படமக்கும் வாய்ப்பு செழியனுக்கு கிடைத்துள்ளது. "சுடும் நிலவு, சுடாத சூரியன்" பாடலை செழியன் ஒளிப்பதிவு செய்த விதம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் உடனடியாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், கல்லூரி படத்திற்கான ஒளிப்பதிவு வாய்ப்பை வழங்கினார். இதன்பின் பாலச்சந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டச்சுழி, விஜய் சேதுபதியின் முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

பின்னர் இயக்குநர் பாலாவின் பரதேசி மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்கள் செழியனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பின்னர் டூலட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் தேசிய விருது கிடைத்தது. சினிமா என்று மட்டும் அல்லாமல் உலக சினிமா தொடர்பாக செழியன் எழுதிய புத்தகங்களும் பிரபலமானவை. வெளிநாட்டு திரைப்படங்கள் தொடர்பாக செழியன் எழுதியுள்ள புத்தகங்கள் இன்றும் கூட சினிமா பயிலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய திறப்பை உருவாக்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே செழியன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செழியன், இன்று காலை திடீரென காலமானார். செழியனின் மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.