தென்னாபிரிக்கா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியது !

04.07.2021 09:57:06

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை தென்னாபிரிக்கா அணி 3-2 என கைப்பற்றியுள்ளது.

கிரெனடாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்த தீர்மானித்து முதலில் களமிறங்கியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மார்க்ரம் 70 ஓட்டங்களையும் குயின்டன் டி கொக் 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக எட்வேர்ட்ஸ் 2 விக்கெட்களையும் பிராவோ மற்றும் ஒபேட் மெக்காய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எவின் லூயிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய போதும் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி ஈசர்பாக எவின் லூயிஸ் 52 ஓட்டங்களையும் சிம்ரான் ஹெட்மியர் 33 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக லுங்கி இன்கிடி 3 விக்கெட்களையும் காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணியின் வீரர் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடர் நாயகனாக தப்ரெஸ் ஷம்ஸி தெரிவு செய்யப்பட்டார்.