கமல்ஹாசன் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியாக பயன்படுத்த தடை நீட்டிப்பு!

05.02.2026 14:26:30

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பியின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி-ஷர்ட்களையும், சட்டைகளையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்

கமல்ஹாசன், எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் வகையில் பொதுவான ஒரு தடையை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என திரும்ப வந்துள்ளதாகக் கூறினார். அதன் காரணமாக மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டது. Powered By இதனையடுத்து நீதிபதி, எதிர்மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப கமல்ஹாசன் தரப்புக்கு அனுமதி அளித்தார். மேலும், கமல்ஹாசன் தரப்பு விரும்பும் பட்சத்தில் மனு குறித்து செய்தித் தாள்களில் இன்னும் விரிவாக விளம்பரம் செய்ய அறிவுறுத்தி வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.