திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாமலை வந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர். இதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.
இதுவரை இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 7.26 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 2 லட்சம் கற்பிக்கும் தன்னார்வலர்கள், 34 லட்சம் கற்கும் மாணவர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் தினமும் 3 லட்சம் மணி நேரம் கற்பிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.
பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாக 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக உள்ளது.