யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

03.11.2022 10:39:10

யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.

தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின் பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.