இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதகமான நிலையில்

27.07.2023 18:05:43

இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதகமான நிலையில்இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையின் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.


நெருக்கடியான காலங்களில் இந்தியா, இலங்கைக்கு கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை வழங்கும் போது இலங்கைக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்திய மக்களவையின் வெளியுறவுக் குழு, 'இந்தியாவின் அயலவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கை தொடர்பான அறிக்கையில் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக இந்தியா 142 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் எரிசக்தி, பெருந்தோட்டம், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனிமங்கள், மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்தி மற்றும் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் ஆராய வேண்டும் என மேலும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடனை அங்கீகரிப்பதற்கும்  மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு இந்தியா உதவியமையக்கும் பாராளுமன்ற வெளிநாட்டு சேவைக் குழுவால் பாராட்டப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்திலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் இந்தியா இலங்கைக்காக செயற்பட வேண்டும் என்றும் அந்த குழு மேலும் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்த பல கட்டங்கள் அடங்கிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டுக்கு வருகை தந்த அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சோலார் பேனல் திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையின் சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.