பாக்குநீரிணையை நீந்திக் கடக்கவுள்ள சிறுவன்

21.02.2024 14:08:16

மிக இளவயதில் பாக்குநீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த பயணிக்கவுள்ள திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதான ஹரிகரன் தன்வந்த்துக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனுடைய யாழ். மாவட்ட அலுவலகத்தில் சாதனையை நிலைநாட்டவுள்ள சிறுவனைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;

 

இலங்கை – இந்திய தேசங்களுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்தும் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிலைநாட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த செல்வன் ஹரிகரன் தன்வந்த்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

13 வயதில் இந்தச்சாதனையை நிலைநாட்ட எடுத்துள்ள இவரது முதலடியானது, எதிர்கால சிறுவர்களுக்கு பெரும் நம்பிக்கையை விதைக்கும்.

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் தூரத்தினை நீந்திக் கடக்கும் சாதனை பயணத்தை தன்வந்த், எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 12.05 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பிக்கின்றார்.

 

இந்தப்பயணத்தின் ஊடாக இருநாடுகளினதும் சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் நல்லுறவும்- நட்புறவும் வலுப்பெற ஓர் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இடைவிடாத பயிற்சியையும்- முயற்சியையும் சிறுவயதிலிருந்து கொண்டிருக்கும் தன்வந்த் போன்றவர்கள் இத்தேசத்தின் பெருமையை நிலைநாட்டும் எதிர்கால நம்பிக்கைகள். அவர்களை ஊக்கப்படுத்துவது எமது கடமையாகும்.

திருமலை மண்ணின் மைந்தன் ஹரிகரன் தன்வந்த் அவர்களின் சாதனைப்பயணம் சிறப்பாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என மேலும் அவர் குறிப்பிட்டு வாழ்த்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.