பாகிஸ்தானிடம் இங்கிலாந்து அணி தோல்வி !

17.07.2021 10:46:01

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ட்ரெண்ட் பிரிட்ஜ்- நொட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 85 ஓட்டங்களையும் ரிஸ்வான் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டொம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வில்லி, சகீப் மொஹமுத் மற்றும் கிரிகோரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக லியாம் லிவிங்டன் 103 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இமாட் வசிம், மொஹமட் ஹஸ்னெய்ன் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் ஷாயின் ஷா அப்ரிடி தெரிவுசெய்யப்பட்டார்.