அரசியல் களத்தில் மீண்டும் ஒரு அதிர்வலை ஏற்படும்
எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் அமருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்துடன் கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் ஒரு அதிர்வலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவார் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்படியானால், நாட்டின் அரச தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களாக 10 பேரை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சரவையை விசேட சபையின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் நடைபெற்றது. எது எப்படி இருந்த போதிலும் புதிய பிரதமர் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவராக இருப்பார் என்றே பேசப்படுகிறது.
இதன்படி டளஸ் அழகப்பெரும பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும், சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினரும் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.