இந்திய அரசுக்கு நன்றி!

31.07.2022 02:32:14

மண்ணெண்ணெய் இலங்கைக்கு ஏற்றுமதி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசு உடனடியாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏட்பட்டுள்ளதால் பல தரப்பினரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இல்லாமல் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நெருக்கடியில் கடற்றொழிலாளர்கள்

இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை அடுத்து கடற்றொழிலாளர்களுக்கு ஓரளவு டீசல் கிடைக்க வழி செய்தபோதும், கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலதரப்பட்ட முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறார்.

அதில் ஒரு கட்டமாக இந்திய அரசாங்கத்திடமும் மண்ணெண்ணெயின் அவசியத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தார். அதற்கமைய இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன் இதனால் பயனடையவுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சார்பாகவும் இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.