உங்கள் கண்தானத்தால் நான் கண்ணீரில் மிதக்கிறேன் : ரசிகர்களுக்கு புனித் ராஜ்குமார் மனைவி கடிதம்

18.11.2021 08:55:44

 

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவர் கண்தானம் செய்திருந்ததால் அவரது கண்கள் பெறப்பட்டு அதன் மூலம் 4 பேருக்கு கண்பார்வை கிடைத்துள்ளது. இந்த நிகழ்வால் கர்நாடக மாநிலத்தில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் கண்தானம் செய்து அதன் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்ரீ புனித் ராஜ்குமாரின் அகால மரணம் எங்கள் குடும்பத்தினரை மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை 'பவர் ஸ்டாராக' மாற்றிய ரசிகர்களான உங்களுக்கு இந்த இழப்பு எவ்வளவு வலியை தந்திருக்கும் என்பதை கற்பனை செய்வது கடினம்.

நீங்கள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்தாலும், உங்கள் அமைதியை இழக்காமல், விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழாமல், புனித் ராஜ்குமாருக்கு மரியாதையுடன் பிரியாவிடை வழங்குவதை உறுதி செய்தீர்கள் கனத்த இதயத்துடன், மில்லியன் கணக்கானவர்களிடமிருந்து இரங்கல் வந்துள்ளது அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயிரக்கணக்கானோர் புனித்தின் வழியைப் பின்பற்றி கண் தானம் செய்யப் பதிவு செய்வதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவரை ஆதர்சமாக வைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் இந்த நற்செயல்களில் அவர் வாழ்வார். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் முழு குடும்பத்தின் சார்பாகவும், மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு அந்த கடித்தில் அஸ்வினி தெரிவித்துள்ளார்.