சுரேஸ் சாலே கைதில் எந்தப் பிரச்சினையும் இல்லை!

26.02.2026 14:09:48

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தினம் அண்மிக்கும் போது ஏதாவதொன்றை செய்வதைப் போன்று, இம்முறை முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதியை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் நாடகமாக இருக்கக் கூடாதுஎன ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

25ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனக் கூறினார்கள். ஒவ்வொரு ஆண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தினம் அண்மிக்கும் போது ஏதாவதொன்றை செய்வதைப் போன்று, இம்முறை முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதியை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் நாடகமாக இருக்கக் கூடாது. பேராயர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களும் அரசாங்கத்தின் இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே கத்தோலிக்க மக்களில் 99 சதவீதமானோர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். சலே கைது செய்யப்பட்டதிலோ, அவரை விசாரணைக்கு உட்படுத்துவதிலோ எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் இந்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதை செய்யும் என எமக்கு நம்பிக்கை இல்லை. சட்டத்தரணி தம்பதியர் கொலை தொடர்பில் இரண்டாவதாக கைது செய்யப்படவுள்ளதாக சந்தேகநபரொருவரின் பெயர் நீதி அமைச்சரால் கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறுறொரு சந்தேகநபரே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் சந்தேகநபரின் பெயரை தவறாகக் கூறிவிட்டாரா? அல்லது விசாரணையை நிறைவு செய்வதற்காக பாதாள உலகக் குழுவின் உறுப்பினரொருவர் எழுமாறாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றாரா? அரசாங்கத்தின் இவ்வாறான சில செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.