5000 இஸ்லாமியர்களை ஒன்று திரட்டிய மாகாகண ஆளுநர்

23.03.2024 09:12:41

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

 

ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ.அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லா,நாடாளுமன்ற உறுப்பினர்காளான ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், செய்யத் அலி சாஹிர் மௌலானா, எஸ். எம். எம். முஷாரப், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளிதரன் உட்பட உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு அல் குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இப்தார் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.