மூன்றாவது ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா தோல்வி- தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் !

13.07.2021 11:04:32

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

சென்.லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரிக்ஸ் 33 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் வோல்ஷ் 2 விக்கெட்டுகளையும் ஒபேட் மெக்கொய், டுவைன் பிராவோ மற்றும் பெபியன் அலென் மற்றும் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 14.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் கெய்ல் 67 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கிறிஸ் கெய்ல் தெரிவுசெய்யப்பட்டார்.