இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20இல் இந்தியா வெற்றி!

08.07.2022 11:44:06

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது

 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சவுத்தம்ப்டன் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திப் பாண்ட்யா 51 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி மற்றும் கிறிஸ் ஜோதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டொப்லே, டைமல் மில்ஸ் மற்றும் மத்தியு பார்கின்ஸன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 199 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி 36 ஓட்டங்களையும் ஹரி புருக் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.