
தலைமை தூய்மையாக இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு, மாளிகாவத்தை பிரிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் இப்போது பணிகளைத் தொடங்கியுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தோம். அது அடுத்த எட்டு மாதங்களுக்கானது. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை வழங்கும் அபிவிருத்தியை உருவாக்க, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்த நாங்கள் விரும்பினோம்..
நம் மீது குறை கூறும் யாரும் இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பண விரயம் பற்றிப் பேசுவதில்லை.
நிதிகளை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். திட்டங்களை வகுக்கின்றோம். அந்தத் திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, கீழ்மட்டத்தில் உள்ள தலைமையும் தூய்மையாக இருக்க வேண்டும்.
எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இது ஒரு பிற்போடப்பட்டிருந்த தேர்தல். நாம் முதலில் செய்ய வேண்டியது, முன்னைய அரசாங்கங்களால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதும், தவறுகளைச் சரிசெய்வதும்தான்.
அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயைப் பற்றியும் ஆயிரம் முறை சிந்திக்கிறது. அரசாங்கம் ஒதுக்கப்பட்ட பணத்தை கிராம மட்டத்திற்கு அனுப்பும்போது, அங்கு திருடர்கள் இருந்தால், நாம் எப்படி கிராமத்தை அபிவிருத்திசெய்ய முடியும்?. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான மக்களின் முடிவின் மூன்றாவது சவாலாகக் கருதி, மே 6 ஆம் திகதி நடைபெறும் தேர்தல்களில் முன்னைய தேர்தல்களைப் போன்ற ஒரு வெற்றியைப் பெறுவோம்.