செப்டம்பர் 23 முதல் 26 வரை கூடும் நாடாளுமன்றம்!

18.09.2025 15:27:05

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது அமர்வு வாரத்திற்கான நாடாளுமன்ற அலுவல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

 

இதற்கு அமைய செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாடளுமான்றம் கூடும் ஒவ்வொரு நாளும் கா‍லை 09.30 மணி முதல் காலை 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கா‍லை 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செப்டெம்பர் 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

அன்றையதினம் மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

அன்றையதினம் மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், செப்டெம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.