அதிமுக கூட்டணியில் இணைந்த புரட்சித் தமிழகம் கட்சி!
|
அதிமுக கூட்டணியில் புரட்சித் தமிழகம் கட்சி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் புரட்சித் தமிழகம் கட்சியின் ஏர்போர்ட் மூர்த்தி சந்திப்பு நடத்தினார். இதன்பின் 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி க்கு ஆதரவு அளிப்பதாக ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், சிறிய அமைப்புகளின் ஆதரவை கூட திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இழக்க விரும்பவில்லை. |
|
கடந்த சில நாட்களாகவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து வருகின்றன. இதனிடையே அதிமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாமக உடனான தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்ட சூழலில், பாஜக மற்றும் அமமுக உடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். அதேபோல் தமாகா தலைவர் ஜிகே வாசன் நேற்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மற்றும் புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின் ஏர்போர்ட் மூர்த்தி பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக அதிமுக கூட்டணி இன்னும் விரிவடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் அறிவிப்புக்கு பின் பல்வேறு அமைப்புகளின் ஆதரவையும் பெற அதிமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. |