ஆட்காட்டி துயிலும் இல்லத்தின் உடைப்பு - தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

20.11.2021 10:00:00

மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின் உடைப்பு தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

எம் இனத்தின் விடுதலைக்கான உன்னதமான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் துயிலும் இல்லங்களில் இருக்கும் போராட்ட காலங்களில் ஆகுதியான மாவீரர்களின் கல்லறைகளை அதே பன்னிரெண்டு வருடங்களாகவே சிறிலங்கா இனவாத அரசு இடித்தொழிக்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என்பதை மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின் உடைப்பு வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் சிறிலங்கா இராணுவத்தினதும், அரச, இராணுவ புலனாய்வாளர்களதும் மிலேட்சத்தனமான செயற்பாடாக தொடர்வது ஏற்கனவே இடித்தொழித்த துயிலுமில்ல கல்லறைகளின் சிறு பாகங்களை கூட ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உடைத்தெறியும் செயற்பாடுகள் ஒரு புறமாகவும் தமிழ்த் தேசிய பரப்பில் முன்னின்று செயற்படும் செயற்பாட்டாளர்களை, அவர்களது குடும்பத்தினரை, ஆதரவாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதும், பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்புக்கு அழைத்து மிரட்டுவதும், பின் தொடர்வதும் மறுபுறத்தில் சிறிலங்கா காவல்துறை மூலமாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து அதன் மூலமாக நினைவேந்தல்களுக்கான தடையுத்தரவுகளையும் பெறுவதும், அச்சுறுத்துவதுமாக ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் மிலேட்சத்தனமான அராஜகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சிறிலங்கா பேரினவாத அரசே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களாகிய நாம் எம் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை இப்பொழுது மட்டுமல்ல இந்த உலகில் மானிடம் உள்ளவரை பல தலைமுறை தாண்டியும் நினைவிற்கொள்வோம். ஆகவே நீங்கள் இடித்தொழிக்க வேண்டியது துயிலும் இல்லங்களை அல்ல உலகத் தமிழர்களின் இதயங்களையும், உணர்வுகளையுமே முடிந்தால் அதை செய்யுங்கள் அப்பொழுது தமக்கான உரிமையை கேட்டு போராடிய ஒரு இனத்தை அழித்த சிங்கள அரக்கர்களாக புத்தரின் வரலாறு இந்த உலகில் மாற்றமடையட்டும்.