நாளை இடம்பெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு.

29.06.2025 08:21:07

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் நாளைய தினம் (30) விசேட நாடாளுமன்ற அமர்வு நாளாக, நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர (Kushani  Rohanadeera) தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

 

பிரதமரின் கோரிக்கை

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இவ்வாறு நாளை நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இதற்கமைவான அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் நாளை மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.