வரைபில் இனப்படுகொலை என்பதே இல்லை! அம்பலப்படுத்தினார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

24.01.2021 17:00:00

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை எனும் விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், தான் கூறுவது பொய் என்றால் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்களிடமும் கேளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதியாக கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர்கள் ஒரு வரைபை கொண்டுவந்து வாசித்தார்கள். அந்த கூட்டத்தில் பலர் பங்குபற்றியிருந்தார்கள். பங்குபற்றிய அனைவரிடமும் நீங்கள் கேட்கலாம் - அவர்கள் கொண்டுவந்து வாசித்த வரைபில் இனப் படுகொலை என்ற வசனம் இருந்ததா என்று.

ஆகவே நான் இதில் இனப் படுகொலை என்ற வார்த்தை இல்லை. அவ்வாறான வரைபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு போய் என்ன செய்யப் போகின்றீர்கள். எனவே இனப்படுகொலை என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும் என நான் கூறியதற்கு பிறகு, சிவாஜிலிங்கம் அதனை வலியுறுத்திப் பேசினார்.

இதில் திருகோணமலையில் இருந்து வந்த ஆயர் இருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பாதிரியார்கள் இருந்தார்கள். திரு. வேலன் சுவாமி இருந்தார். இன்னும் பல சிவில் அமைப்புகள் இருந்தன. ஆகவே நீங்கள் இதை அவர்களிடமும் போய் கேட்கலாம்.

நாங்கள் வலியுறுத்தியதன் பிற்பாடு அதனை சேர்த்துக்கொள்வதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பம் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுமந்திரனும் எனக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாது தான் - நீங்கள் எல்லோரும் கூறுவதால் நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் எனக் கூறியிருந்தார்.

இதனை அவர்கள் மறுத்தால் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்களிடம் நீங்கள் கேட்கலாம் என்றார்.