செம்மணி குறித்து நீதியான விசாரணை நடக்கிறதாம்!

17.07.2025 12:26:03

செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக செம்மணி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு அந்த நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி விவகாரங்கள் தொடர்பில் எம்மிடம் உள்ள தகவல்களை நாம் வெளியிட மாட்டோம். அவற்றை வெளியிட்டால் அதைப் பெற்றுக்கொள்வோர் அதனை எவ்வாறான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவார்கள் எனத் தெரியாது. இந்த விடயங்களில் எவரது அவசரத்துக்கும் ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.

கடந்த அரசு அவ்வாறு செயற்பட்டாலும் எமது அரசு ஒருபோதும் அவ்வாறு செயற்படாது. அரசு என்ற வகையில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.