
இன்னும் விருதுகள் கிடைத்திருக்கலாம் - பார்த்திபன்
67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த படத்திற்கான ஜூரி விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் தனக்கு பூரண திருப்பி இல்லை. சிறந்த நடிகருக்கான விருதும் தனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியி்ல் கூறியிருப்பதாவது: உண்மையாக சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கார் விருது விழாவில் ஒரே படத்துக்கு நிறைய விருதுகள் கொடுப்பார்கள், 11 விருதுகள் வரையில் கொடுப்பார்கள். அதுபோல் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த விருது கிடைத்ததிலும் எனக்கு மகிழ்ச்சியே.
இந்த படம் என்னுடைய தனித்துவமான படம், ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது. மலையாள படங்களை தேசிய விருதுக்கு சிபாரிசு செய்ய பலமான பிளாட்பார்ம் உள்ளது. தமிழ் படங்களுக்கு இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற முயற்சிப்பேன்.
எனது அடுத்த படம் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படம் என்றும் உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி தான் இந்த படம். தொடர்ந்து புதிய முயற்சிகள் செய்து கொண்டிருந்தால் எங்காவது ஒரு இடத்தில் லாக் ஆகிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதற்கு இடையில் பக்காவான கமர்ஷியல் காமெடி படம் ஒன்றையும் இயக்க இருக்கிறேன். என்றார்.