சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ்

15.03.2024 07:00:00

வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தைச் சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்;

பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் வடக்கின் அபிவிருத்திக்கு இன்றைய அரசு அதிகளவான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

அதன் அடிப்படையில் வெளிநாடுகளுடன் நாம் குறித்த நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளின் பயனாக வடக்கின் அபிவிருத்திக்காக சீனா 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ளது.

குறித்த 1500 மில்லியனில் வீட்டுத்திட்டத்துக்காக 500 மில்லியனும், மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக 500 மில்லியனும், கடற்றொழிலாளர்களுக்கான வலை வழங்குவதற்காக 500 மில்லியனும் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனா எதிர்வரும் 22 ஆம் திகதி சீனா செல்கின்றார். இதற்கான ஒப்பந்தத்தை சீனா செல்லும் பிரதமர் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடுவார் என நம்புகின்றேன்.

இதேநேரம் இந்திய அரசும் வடபகுதியின் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ளது.

குறிப்பாக கடல் ஆய்வு நடவடிக்கைகள், கடற் பகுதியில் பாரியளவிலாள கூடுகளில் மீன் வளர்ப்பதற்கான  திட்டங்கள் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கென இந்த நிதி வழங்கப்படுகின்றது.

இதேவேளை ஜப்பான் அரசும் வடக்கின் அபிவிருத்தி மற்றும் மக்களின் கடற்பாதுகாப்பு செயற்றிட்டங்களுக்காக 415 மில்லியன் வழங்க முன்வந்துள்ளது.

அந்தவகையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் எமது மக்களுக்கானதாக சரியான வகையில் கொண்டுசென்று மக்களின் வாழ்வியலில் சிறப்பான மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.