நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பணிப்பு

27.07.2024 09:08:29

முழு நாட்டினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று கூடிய போதே, அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

 

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.