வோல்கர் டர்க்-பிரதமர் இடையே சந்திப்பு!

24.06.2025 08:10:17

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டிற்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவர்களை வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.

 

அவர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை 03நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார்.

​​உயர் ஸ்தானிகர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க இருந்த நிலையில் நேற்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யாவை ​​உயர் ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

மேலும், அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேலும் அவர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரின் வருகையை ஒட்டி , பிரச்சினையின் ஆழத்தை அவருக்கு வலியுறுத்துவதற்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ். செம்மணியில் அணையா விளக்கு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும், அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடனும் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.