மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

10.05.2022 12:18:54

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (10) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நேற்றைய தினம் தாக்குதலை நடத்தவிட்டு பொலிஸார் காத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்திய வன்னிநாயக்க, இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாகக் தெரிவித்தார்.

எனவே இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.