ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு தகுதி

14.07.2022 10:32:17

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த்,காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 66-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற நேர்செட்டில் 12-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுக்கு அதிர்ச்சி அளித்தார்

. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 21-17, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீரர் ஸ்ரீகாந்தை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. ஸ்ரீகாந்தை போல் மற்ற இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.