“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?”.

15.06.2026 08:00:00

அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? என ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆள் பிடிக்கும் நிலை தவெகவுக்கு இல்லை என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒரே ஒருவருக்காக பெரிய விழா எடுத்து பெரிய சாதனை சரித்திரம் படைத்தது போன்று செய்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை.

தவெக தலைவரை நாடி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சி நடைபெறுகின்ற போது அனிதா ராதாகிருஷ்ணன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் போய் சேரவில்லையா? தேர்தலில் பெரும்பான்மை பலம் எங்களுக்கு இருக்கின்ற பொழுது திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சதித் திட்டம் தீட்டியவர் யார் என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இதுவரை தமிழக வரலாற்றில் அதிமுகவோடு திமுக இணைந்து ஒரு ஆட்சியை பிடிக்கலாம் என்று சதிவலை பின்னியது இதுவே முதல் முறை. அதை முறியடித்த பெருமை முதல்வர் விஜய்யைச் சேரும்.

டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் விஜய் பேசியது மு.க ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்? நம் முதல்வர் தமிழ்நாட்டிற்கு என்ன தேவையோ அதனை வாங்கி உள்ளார். சோலார் மின் உற்பத்தி தயாரிப்புக்காக கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் ஒரு மெகாவாட்டுக்கு ரு.1 கோடி மானியம் பெறும் போது தமிழகத்தில் அதை பெற முடியவில்லையே? அதற்கு என்ன காரணம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும்.

ஸ்டாலின் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் இதுபோன்ற கருத்துகளை கூறுவதை காட்டிலும் அமைதியாக இருந்து தனது கட்சியை வலுப்படுத்துவதையும் மக்களின் செல்வாக்கை பெறுவதற்கும் வழிவகை செய்யலாம். ஒரு இயக்கத்தின் தலைமை சுக்கு நூறாக்கப்பட்டிருக்கிறது. இளைய சமுதாயத்தில் உள்ளவர்கள் தவெக தலைவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தொகுதியில் எங்களுடைய சின்னம் இருந்திருந்தால் அவருடைய கதியும் இதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.