ரணிலின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அநுர!

20.10.2024 11:38:00

சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

தங்காலையில் ஆரம்பமான நாடாளுமன்றத் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க ரணில் விக்ரமசிங்கவுக்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் பொதுமக்களின் நிதியில் தேவையற்ற சலுகைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல.

எவ்வாறெனினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரைக்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 06 உத்தியோகபூர்வ வாகனங்களில் 03 வாகனங்களை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.