கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டும் திமுக!
|
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது. தாங்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலேயே இந்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகுதிகளை குறைத்தும், அதனை தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக 170 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 - 25 தொகுதிகளிலும், பிற கட்சிகள் தலா 5 முதல் 1 தொகுதி வரை போட்டியிடலாம் என்கின்றனர். |
|
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தியில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தற்பொது, தமிழகத்தில் தேர்தல் சூழல் வேகமெடுத்து வரும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தொகுதி பங்கீடு இந்த முறை பல முக்கிய கட்சிகள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளதால், கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு விவாதங்கள் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கம்போல பெரும் கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க திமுக முயற்சி செய்கிறது. கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன. கடந்த தேர்தலை விட தற்போது கூட்டணி விரிவடைந்துள்ளதால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக பிரேமலதா வரவு தொகுதி பங்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. அதேபோன்ற அமைப்பை இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை கூட்டணியில் புதிய மாற்றங்களும் பேசப்படுகின்றன.பிரேமலதா விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், மற்றும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு குறித்து பேச்சு நடக்கிறது. இதனால் முந்தைய கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. தற்போது வெளிவந்த தகவல்களின் படி, திமுக சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடும் திட்டம் வைத்துள்ளதாகவும், காங்கிரஸுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா சில தொகுதிகள் வழங்கும் திட்டமும் பேசப்படுகிறது. சிறிய கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று முதல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் ஒரு சில தொகுதிகளில் திமுக சின்னத்திலேயே நிற்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் திமுக விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே கூட்டணியில் தொடலாம் எனவும், பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படாவிட்டால் வேறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என திமுக பேச்சுவார்த்தைக்குழு தலைவர்கள் வெளிப்படையாகவே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. |