ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

17.10.2025 14:43:56

உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார்.

அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார்.

உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது.

எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.

எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும்.

 

இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது.

இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது.

திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். 

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.