
யாழ்.ஆரியகுளம் திறப்பு விழாவில் கண்டிய நடனம் !
யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்றய தினம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திறப்பு விழாவில் கண்டிய நடனம் இடம்பெற்றமைக்கும் யாழ்.மாநகரசபைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார்.
அதோடு அவ்வாறான ஒரு நடன நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்தமைக்கும், அதன் பின்னால் நாக விகாரை விகாராதிபதி அழைத்து வரப்பட்டமைக்கும் யாழ்.மாநகரசபைக்கு தொடர்பில்லை எனவும் முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்றைய விழாவிற்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் கண்டிய நடனத்துடன் அழைத்துவரப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே முதல்வர் இதனை கூறியுள்ளார்.
யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் “துாய நகரம், துாய கரங்கள்” கொள்கை வகுப்புக்கு அமைவாக தியாகி அறக்கொலை நிதியத்தின் நிதி பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஆரியகுளம் நேற்றியதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.