ட்ரோன்களை கொண்டு ஹிஸ்புல்லா தாக்க முயற்சி

13.04.2024 07:29:24

ஈரான் தூதரகம் தாக்குதலுக்கு பழிவாங்க வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி 40 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாகவும், வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரோன்களை கொண்டு இஸ்ரேலை தாக்கவும் ஹிஸ்புல்லா முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்த  நிலையில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே நேற்று நள்ளிரவு வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதட்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.