ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை பதிக்கும் ஈரான்?

24.03.2026 08:00:00

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்து வைத்து இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய கிழக்கின் முக்கிய நீர்வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்து வைத்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. CBS செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் குறைந்தது நீருக்கடியில் இயங்கும் 12 கண்ணிவெடிகளை பொருத்தி வைத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

  

இந்த கண்ணிவெடிகள் முழுக்க முழுக்க ஈரானிய தயாரிப்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் அவற்றில் இரண்டு வகையான கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானிய கடற்படையில் பயன்படுத்தப்படும் மஹாம் 3(Maham 3) கண்ணிவெடிகள், இவை 10 அடி தூரம் வரை இலக்குகளை தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய கடற்படையில் பயன்படுத்தப்படும் மஹாம் 7(Maham 7) கண்ணிவெடிகள் இவை அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக வெடிக்கும் திறன் கொண்டவை. இவை நடுத்தர அளவு கொண்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை செயலிழக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் இந்த கண்ணிவெடிகளை சிறிய வேகப் படகுகளை பயன்படுத்தி வருவதாகவும், இரண்டு அல்லது மூன்று கண்ணிவெடிகளை ஒரு படகால் கடலில் பொருத்த முடியும் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமெரிக்க உளவுத்துறையின் இந்த தகவல்களை ஈரானிய இராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மறுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு கண்ணிவெடிகளை பொருத்த வேண்டிய அவசியம் ஈரானுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.