முல்லைத்தீவினை சேர்ந்த அரசியல் கைதி நேற்று விடுதலை!

17.09.2021 05:40:26

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் 16.09.21 நேற்று  விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக அழைத்து மீண்டும் கைதுசெய்து பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

எனவே தற்போது நாட்டில் நிலவும் கொரோனாவைரஸ் தொற்று சில சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ளதாக அறியப்படுகின்றது இந்த நோய் தொடர்பில் பிள்ளைகளும் தந்தையினை பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கின்றார்கள் இந்த நோயில் இருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கருணைகூர்ந்து தனது கணவரை பிணையிலாவது விடுதலை செய்து தருமாறு கடந்த ஆண்டு மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னிலையில் கடந்த 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16.09.21) விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலை தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த இவர்  இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான 2009.05.18 அன்று ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அங்கிருந்து அவர் வவுனியா பூந்தோட்டம் முகாம் மற்றும் மகாரம்பைக்குளம் முகாமில் விசாரணை செய்யப்பட்ட பின்னர்,  ஒரு மாதம் வவுனியா யோசேப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  அங்கிருந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் 2009.08.24 ஆம் திகதி பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் 2009. 09 ஆம் மாதம் பூசாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 21 மாதங்கள் இருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு 05 ஆம் மாதத்தில் இருந்து நீதிமன்ற கட்டளைப்படி 10 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு அடிப்படை மனித உரிமைகள் வழக்கு பதிவு செய்து கடந்த 2012.03.24 அன்று புனர்வாழ்வு  என தீர்ப்பளிக்கப்பட்டு வவுனியா மருதமடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.  ஒருவருட புனர்வாழ்வு நிறைவு செய்து 2013.03.24 அன்று விடுதலை செய்யப்பட்டார். 

பின்னர் 2013.07.11 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு  4 ஆம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பூசா முகாமுக்கு மாற்றப்பட்டு 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.  பின்னர். 2015.01.02 நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அங்கிருந்து மகசின் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். 2013 ஆம் ஆண்டில் இருந்து வழக்குகள் எவையும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்   குறித்த நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் மனைவி இவரின் விடுதலைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 100 க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.