நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம்

05.08.2022 10:37:50

நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது எனவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான ஆலோசனைக்கு மதிப்பளித்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, நன்றி தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் கோரிய மாற்றம் தற்போது இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியதுடன், சுனாமியின் போதும் யுத்த வெற்றியின் போதும் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களை தற்போது கைவிடாமல் நாட்டை சரியான பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்கு  நடவடிக்கை எடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி ஆட்சிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட 11 ஆலோசனைகள் அடங்கிய வேலைத்திட்டமும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 10 வருடங்களுக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தை வகுக்க அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போராட்டக்காரர்கள் கடைசி நேரத்தில் வன்முறையுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அன்று நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்காவிட்டால் இன்று ஜனநாயகம் பற்றி இவ்வாறு ஒன்றிணைந்து கலந்துரையாட வாய்ப்பே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அது ஒருபோதும் மாறவே கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும, முறையான சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தைக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.