தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்தவகையில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். தடுப்பூசியை எற்றல் தொடர்பான மருத்துவர்களின் விளக்கமளிப்புக்களுடன் கைதிகளுக்கு ஊசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரசியல் கைதிகளின் உறவுகள் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரிவித்தனர்.
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் ஒன்று நிரப்பப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட பின்னரே அவர்களுக்கான ஊசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு தடுப்பூசியை வழங்குமாறு அவர்களின் உறவுகள் அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.