இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!

17.07.2024 07:58:22

நாட்டில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 பேர் கொண்ட உறுப்பினர்களுடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் 130க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் கூடிய தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, நாட்டு மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பின்னரே இந்த அறிக்கையினை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.