இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி !

12.03.2024 08:11:00

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணைகளின் முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை திங்கட்கிழமை (11) மேற்கொள்ளப்பட்டது. 

இது வெற்றி அடைந்ததாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீற்றர் முதல் 3,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிலோ மீற்றர்  தூரம் வரை செல்லக் கூடியது.

இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும்.