சங்கு கூட்டணி இணங்கி வந்தால் மீண்டும் கூட்டமைப்பாக செயற்பட முடியும்!

06.11.2025 15:20:29

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இணங்கி வந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. இதன்போது, நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்ற விடயம் சம்பந்தமாக பேசப்பட்டது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கிறோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததை போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரோடு இணங்கி செயற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, அப்படியாக இணங்கி செயற்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கிறோம். மத்திய செயற்குழுவில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

<