வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

24.04.2024 15:14:15

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.

 

இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

ஆலயப் திருப்பணி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்றையதினம் (24) பி.ப 3.00 மணியளவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற வைகாசி மாதம் 5ஆம் திகதி திங்கள் பாக்குத் தெண்டல் நிகழ்வும் 12ஆம் திகதி திங்கள் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் 20 ஆம் திகதி வைகாசிப் பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், , கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ம.உமாமகள், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், முல்லை வலயக்கல்வி பணிமைனையின் உதவிப் பணிப்பாளர், மின்சாரசபையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்டத்தின் முப்படை அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்