கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.

09.01.2026 14:12:31

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 12-ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகிறார். இதற்காக அவர் 11 ஆம் தேதி டெல்லி பயணிக்கிறார். கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் வழக்கில், கட்சித் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபி-க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணைக்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, டிசம்பர் 29-ஆம் தேதி டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜரான அவர்களிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜனவரி 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஐ முன் ஆஜராக விஜய் 11 ஆம் தேதி டெல்லி புறப்படுகிறார்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது தணிக்கை சான்றிதழ் பிரச்சினைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க கோர்ட் உத்தரவிட்ட நிலையில் சென்சார் குழுவோ தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.