பஞ்சாப் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும்: கங்கனா

08.01.2022 13:21:42

பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார். அவர் சாலை மார்க்கமாக பயணிக்கும்போது திடீர் மறியல் போராட்டம் காரணமாக அவர் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு டில்லி திரும்பினார்.

பிரதமர் பாதுகாப்பில் காட்டப்பட்ட மெத்தனம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து பேசி உள்ளார். ஒரு நாட்டின் பிரதமருக்கு அந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்குவது ஆபத்தானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கூறுகையில், ‛‛பஞ்சாபில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவர் மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதலாகும். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது இருக்கும். என்று எழுதியிருக்கிறார். கங்கனாவின் கருத்தை பலரும் ஆதரித்து வருகிறார்கள்.