பெண்கள் ‘பீட்சா’ சாப்பிடும் காட்சிக்கு தடை

08.10.2021 15:22:40

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் பீட்சா சாப்பிடும் போன்ற காட்சிகளில் பங்கேற்க கூடாது என்று ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் நாட்டின் இஸ்லாமிய ஈரான் குடியரசு ஒளிபரப்பு (ஐ.ஆர்.ஐ.பி) துறை, தொலைக்காட்சியில் தோன்றும் பெண்களுக்கான விதிமுறைகளையும், கட்டுபாடுகளையும் வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ‘தொலைகாட்சிகளில் தோன்றும் பெண்கள், சிவப்பு நிறத்திலான எந்தவொரு உணவையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. பெண்கள் கைகளில் கையுறைகளை அணிய வேண்டும். பீட்சா, சாண்ட்விச் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவது போன்று தங்களை காட்டிக் கொள்ளக் கூடாது. ஆண்கள் பெண்களுக்கு தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது.

அவ்வாறு ஒளிபரப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு அனுமதி பெற வேண்டும். பாலின உறவுகளை தூண்டும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த வழிமுறைகளை யாராவது மீறினால், அவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவி சீரியல் தயாரிப்பாளர் பிஜன் பிராங் கூறுகையில், ‘ஈரான் நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிடுவது  என்பது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகள்  காரணமாக தங்கள் விருந்தினர்களின் முகத்தைக் கூட காட்ட முடியாமல் நிகழ்ச்சி  தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இதுபோன்ற கட்டுபாடுகள் பெண்களை ஒடுக்குவது போன்று உள்ளது’ என்றார்.